logo
logo

ஆதியோகி - முதல் யோகி

மனிதகுலத்திற்கு யோகாவை அறிமுகப்படுத்திய முதல் யோகியான ஆதியோகி பற்றி சத்குருவின் தெளிவான விளக்கத்தைப் பார்ப்போம்.

ஆதியோகி - முதல் யோகி


மனிதகுலத்திற்கு யோகாவை அறிமுகப்படுத்திய முதல் யோகியான ஆதியோகி பற்றி சத்குருவின் தெளிவான விளக்கத்தைப் பார்ப்போம்.

சத்குரு: யோகக் கலாச்சாரத்தில், சிவன் ஒரு கடவுளாக அறியப்படவில்லை, அவர் ஆதியோகி அல்லது முதல் யோகி - யோகாவைத் தோற்றுவித்தவர் என்றே அறியப்படுகிறார். அவர்தான் இந்த விதையை முதலில் மனித மனதில் விதைத்தார். யோகக் கதைகளின்படி, பதினைந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, சிவன் தனது முழு ஞானத்தை அடைந்து, இமயமலையில் தீவிரமான பரவச நடனத்தில் தன்னைத் துறந்தார். அவரது பரவசம் அவருக்கு சில அசைவுகளை அனுமதித்தபோது, ​​அவர் கட்டுப்பாடற்ற வகையில் நடனமாடினார். அது அசைவுகளுக்கு அப்பாற்பட்டபோது, ​​அவர் முற்றிலும் அசைவற்றவராகிவிட்டார்.

இதுவரை யாருக்கும் தெரியாத ஒன்றை, அவர்கள் புரிந்துகொள்ள முடியாத ஒன்றை சிவன் அனுபவிப்பதை மக்கள் கவனித்தனர். ஆர்வம் வளர்ந்து மக்கள் இது என்ன என்பதை அறிய விரும்பினர். அவர்கள் அங்கு வந்து காத்திருந்தனர், ஆனால் அந்த நபர் மற்றவர்களின் இருப்பைக் கவனிக்காததால் அவர்கள் வெளியேறினர். அவர் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை முற்றிலும் பொருட்படுத்தாமல் தீவிர நடனத்தில் அல்லது முழுமையான அமைதியில் இருந்தார். விரைவில் ஒவ்வொருவராக வெளியேறினர் ...

ஏழு ஆண்களைத் தவிர

இந்த ஏழு பேரும் இந்த மனிதனிடம் இருப்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தனர், ஆனால் சிவன் அவர்களைப் புறக்கணித்தார். அவர்கள் அவரிடம் கெஞ்சினார்கள், "தயவுசெய்து, உங்களுக்குத் தெரிந்ததை நாங்கள் அறிய விரும்புகிறோம்." சிவன் அவர்களை நிராகரித்து, “முட்டாள்களே. நீங்கள் இப்போது இருக்கும் நிலையில், பத்து லட்சம் ஆண்டுகளில் கூட இது உங்களுக்குத் தெரியாது. இதற்காக மிகப்பெரிய அளவில் தயாராகவேண்டும். இது பொழுதுபோக்கு அல்ல. "

அதனால் அவர்கள் தங்களைத் தயார் செய்ய ஆரம்பித்தனர். நாள்தோறும, வாரம்தோறும், மாதம்தோறும் அவர்கள் தயாரானார்கள். சிவன் அவர்களை வெறுமனே புறக்கணிக்கத்தார். எண்பத்து நான்கு வருட சாதனாவிற்க்குப் பிறகு, ஒரு பௌர்ணமி நாளில், சூரியன் கோடைகால நிலையிலிருந்து குளிர்கால நிலைக்கு மாறியபோது - இந்த பாரம்பரியத்தில் இது தட்சிணாயணம் என்று அழைக்கப்படுகிறது - ஆதியோகி இந்த ஏழு பேரைப் பார்த்தபோது அவர்கள் ஞானத்தில் பிரகாசிக்கும் பாத்திரங்களாக மாறியிருந்ததை கவனித்தார். அவரிடமிருந்து பெறுவதற்கு முற்றிலும் பழுத்த நிலையில் இருந்தனர். அவரால் அவர்களைப் புறக்கணிக்க முடியவில்லை. அவருடைய கவனத்தை அவர்கள் பெற்று விட்டனர்.

Sadhguru at Kanti Sarovar


அவர் அடுத்த சில நாட்களுக்கு அவர்களை உன்னிப்பாக கவனித்தார், அடுத்த பௌர்ணமி உதித்தவுடன், அவர் குருவாக மாற முடிவு செய்தார். ஆதியோகி தன்னை ஆதி குருவாக மாற்றிக் கொண்டார்; இன்று குரு பூர்ணிமா என்று அழைக்கப்படும் அந்த நாளில் முதல் குரு பிறந்தார். கேதார்நாத்துக்கு மேலே சில கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள காந்தி சரோவர் கரையில், அவர் மனித குலத்தின் மீது கருணை காட்ட தென்முகமாக திரும்பினார், இந்த ஏழு பேருக்கும் யோக அறிவியலின் பரிமாற்றம் தொடங்கியது. யோக அறிவியல் என்பது உங்கள் உடலை எப்படி வளைப்பது என்பது பற்றிய யோகா வகுப்பு அல்ல - புதிதாகப் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் அது தெரியும் - அல்லது உங்கள் மூச்சை எப்படி பிடித்து வைப்பது - கருவில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் அது தெரியும். இது மனித அமைப்பு முழுமையாக இயங்கும் முறையைப் புரிந்துகொள்ளும் அறிவியல்.

பல வருடங்களுக்குப் பிறகு, பரிமாற்றம் முடிந்ததும், அது முழுமையாக ஞானம் அடைந்த ஏழு உயிர்களை உருவாக்கியது - அவர்கள்தான் இன்று சப்தரிஷிகள் என்று அழைக்கப்படும் ஏழு புகழ்பெற்ற முனிவர்கள், இந்திய கலாச்சாரத்தில் வணங்கப்பட்டு போற்றப்படுகிறார்கள். சிவன் இந்த ஏழு பேருக்கும் யோகாவின் வெவ்வேறு அம்சங்களை வழங்கினார். மேலும் இந்த அம்சங்கள் யோகாவின் ஏழு அடிப்படை வடிவங்களாக மாறியது. இன்றும் கூட, யோகா இந்த ஏழு தனித்துவமான வடிவங்களைக் கொண்டதாக உள்ளது.

யோக அறிவியலை ஏழு ரிஷிகளுக்கு பரிமாற்றம் செய்தது


சப்தரிஷிகள் ஏழு வெவ்வேறு திசைகளில் உலகின் பல்வேறு பகுதிகளுக்கு இந்த பரிமாணத்தை எடுத்துச் செல்ல அனுப்பப்பட்டனர், இந்த பரிமாணத்தின் மூலம் ஒரு மனிதன் தனது தற்போதைய வரம்புகள் மற்றும் நிர்ப்பந்தங்களுக்கு அப்பால் வளர முடியும். அவர்கள் சிவனின் அங்கங்களாக மாறி, ஒரு மனிதன் இங்கேயே எப்படி ஒரு படைப்பாளராக மாற முடியும் என்பதற்கான அறிவையும் தொழில் நுட்பத்தையும் உலகிற்கு எடுத்துச் சென்றனர். காலம் பல விஷயங்களை அழித்துவிட்டது, ஆனால் அந்த நிலங்களின் கலாச்சாரங்களை கவனமாகப் பார்க்கும்போது, ​​இந்த மக்கள் செய்த வேலையின் சிறிய இழைகள் காணப்படுகின்றன, இன்னும் உயிருடன் உள்ளன. இது பல்வேறு நிறங்கள் மற்றும் வடிவங்களை எடுத்துள்ளது, மேலும் அதன் வண்ணம் இலட்சக்கணக்கான வெவ்வேறு வழிகளில் மாறியுள்ளது, ஆனாலும் அந்த இழைகளை இன்றும் காணலாம்.

மனித இனத்தின் வரையறுக்கப்பட்ட வரம்புக்குள் ஒரு மனிதன் இருக்க வேண்டியதில்லை என்று ஆதியோகி இந்த சாத்தியத்தைக் கொண்டு வந்தார். இயற்பியல் சார்ந்த கட்டுப்பாட்டுடன் இருக்கலாம் ஆனால் அதனுடன் பிணைந்து இருக்க வேண்டியதில்லை. உடலில் வசிக்க ஒரு வழி இருக்கிறது, ஆனால் ஒருபோதும் உடலாக மாற வேண்டியதில்லை. மனதின் துயரங்களை அறியாமலே உங்கள் மனதை மிக உயர்ந்த வழியில் பயன்படுத்த ஒரு வழி இருக்கிறது. இப்போது நீங்கள் எந்த பரிமாணத்தில் இருந்தாலும், நீங்கள் அதைத் தாண்டி செல்லலாம் - வாழ மற்றொரு வழி இருக்கிறது. அவர் சொன்னார், "உங்களைச் சரியாக தயார் செய்து கொண்டால் உங்கள் தற்போதைய வரம்புகளுக்கு அப்பால் நீங்கள் வெளிப்படலாம்." அதுதான் ஆதியோகியின் தனிச்சிறப்பு.

    Share

Related Tags

ஆதியோகி

Get latest blogs on Shiva

Related Content

மண்பானை குயவனிடம் மனமிறங்கிய ஆதியோகி சிவன்!