ஆதியோகி இவ்வளவு பெரிதாக இருப்பதேன்?
தில்லி ஸ்ரீராம் வணிகவியல் கல்லூரி மாணவர்கள், ஆதியோகி ஏன் இவ்வளவு பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளார் என்று கேட்டதற்கு சத்குரு பதிலளிக்கையில், அளவு என்பது தனிமனிதர்களின் பார்வையைப் பொறுத்ததாக இருக்கிறது என்றும், ஆதியோகியின் வடிவம் குறிப்பாக மூன்று தன்மைகளை வெளிப்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் விளக்குகிறார்.
![Image of 112 ft Adiyogi statue at the Isha Yoga Center taken during sunset | Why is the Adiyogi So Huge? Image of 112 ft Adiyogi statue at the Isha Yoga Center taken during sunset | Why is the Adiyogi So Huge?](https://static.sadhguru.org/d/46272/1633489522-1633489521407.jpg)
கேள்வியாளர் : சத்குரு, உங்கள் ஆசிரமத்தில் இவ்வளவு பெரிய ஆதியோகி சிலையை உருவாக்கியுள்ளீர்கள். அங்கு வந்து அதைக் காண்பவர் யாவரும் அதிசயப்படுகிறார்கள். இன்றைய சூழ்நிலையில் மக்கள் கவனத்தை ஈர்க்க எல்லாவற்றையும் பெரிய அளவில் செய்யவேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்களா?
சத்குரு : ஒரே ஒரு சிலை தானே இருக்கிறது? பெரிய அளவில் என்று எப்படி சொல்கிறீர்கள்?
கேள்வியாளர் :ஆனால் அது மிகப்பெரிய வடிவமாக உருவாக்கப்பட்டுள்ளது.
சத்குரு: பெரியதும் சிறியதும் மனிதர்களின் பார்வையைப் பொறுத்தது. யோகா மையத்தில் இருப்பவர்கள் அனைவரும், "சத்குரு, நாம் இன்னும் சற்று பெரியதாக செய்திருக்கவேண்டும், பின்னால் இருக்கும் மலையுடன் ஒப்பிட்டால் சிறியதாகத் தெரிகிறது" என்கிறார்கள். எனவே இது மக்களின் பார்வை சார்ந்தது, ஆனால் காணும் காட்சியின் தாக்கம் என்பது இருக்கிறது. நான் ஒருவேளை இப்போது உங்களிடமிருக்கும் ஐம்புலன்களில் நான்கை எடுத்துவிடுவேன் என்று சொன்னால், எதை வைத்துக்கொள்ள விரும்புவீர்கள்? மூக்கை மட்டுமா, அல்லது நாக்கை மட்டுமா?
கேள்வியாளர் :எல்லாம் முக்கியம்.
Subscribe
சத்குரு: எல்லாம் முக்கியம்தான், ஆனால் நான்கை இழக்கப்போகிறீர்கள் என்றால், எதை வைத்துக்கொள்ள விரும்புவீர்கள் என்று நீங்கள் தேர்வுசெய்ய வேண்டும், ஏனென்றால் வாழ்க்கை அத்தகையது, அது உங்களை எல்லாவற்றையும் வைத்துக்கொள்ள அனுமதிக்காது. அதனால் எந்த நான்கை இழந்து, எந்த ஒன்றை வைத்துக்கொள்ள விரும்புவீர்கள்?
கேள்வியாளர் :அந்த ஐந்தும் என்னென்னவென்று சொல்லமுடியுமா?
சத்குரு: உங்கள் கண்களையோ, காதுகளையோ, நாக்கையோ, தொடு உணர்வையோ, மூக்கையோ எடுத்துவிடுவோம் என்றால், எந்த ஒன்றை உங்களுடன் வைத்துக்கொள்ள விரும்புவீர்கள்? சொல்லுங்கள்.
பங்கேற்பாளர்கள்: கண்கள்!
சத்குரு: நிச்சயம் கண்கள்தான். ஏனென்றால் ஐம்புலன்களில், பார்வை ஏற்படுத்தும் தாக்கமே உங்களுக்கு அனைத்திலும் பெரிதாக இருக்கிறது. நீங்கள் ஒரு நாயாக இருந்து, நான் இந்த கேள்வியை உங்களிடம் கேட்டிருந்தால், "மூக்கு" என்று சொல்லியிருப்பீர்கள், ஏனென்றால் நாய், உணவு தேடுவதும் உயிர்பிழைப்பதும் அதன் மூக்கைக் கொண்டுதான். ஆனால் ஒரு மனிதருக்கு, பார்வையின் தாக்கமே மிகப்பெரியதாக இருக்கிறது. அந்த விதத்தில், இது ஆதியோகியின் அளவைப் பற்றியதல்ல, வடிவியல் பற்றியது. மிகச்சிறிய அளவில் வடிவியலை கச்சிதமாக்குவது மிகவும் கடினம். வடிவியலை சுலபமாக கச்சிதமாய் எடுத்துவர, ஒரு குறிப்பிட்ட அளவு தேவைப்பட்டது.
ஆதியோகியின் வடிவியல் மூன்று அம்சங்களை வெளிப்படுத்த வேண்டுமென விரும்பினோம் - உயிரின் உற்சாகம், உயிரின் நிச்சலனம், மற்றும் போதை.
ஆதியோகியின் வடிவியல் மூன்று தன்மைகளை வெளிப்படுத்தும் விதமாக இருக்கிறது. இன்று நீங்கள் வீட்டுக்கு செல்லும்போது உங்கள் தந்தை ஒரு குறிப்பிட்ட விதமாக அமர்ந்திருப்பதைப் பார்த்தால், அவர் அமர்ந்திருக்கும் விதத்தைக் கண்டே அவர் கோபமாக இருக்கிறாரா, சந்தொஷமாக இருக்கிறாரா, கவலையாக இருக்கிறாரா அல்லது நெருடலுடன் இருக்கிறாரா என்று கண்டுபிடித்துவிடுவீர்கள். ஆதியோகியின் வடிவியல் மூன்று அம்சங்களை வெளிப்படுத்த வேண்டுமென விரும்பினோம் - உயிரின் உற்சாகம், உயிரின் நிச்சலனம், மற்றும் போதை. இந்த முகத்தை சரியான வடிவத்திற்கு எடுத்துவர நான் இரண்டரை வருடங்கள் வேலைசெய்தேன். பலப்பல முகங்களை உருவாக்கினோம். ஒரு குறிப்பிட்ட அளவு வேண்டுமென முடிவுசெய்தோம், அந்த அளவு 80 அடிக்கு மேலாக இருந்தது. பிறகு அந்த எண்ணிற்கும் ஒரு மகத்துவம் இருக்கவேண்டுமென நினைத்தோம், எனவே 112 அடி உயரத்தில் செய்தோம்.
ஒரு மனிதர் தன் உச்சபட்ச சாத்தியத்தை எட்ட பல்வேறு வழிகளை ஆதியோகி பரிமாறியபோது, அவர் 112 வழிகளை வழங்கினார். அதனால் இதை 112 அடியாக செய்தோம். நாங்கள் விரும்பிய வடிவியலை 80 முதல் 90 அடிக்குக் குறைவான அளவில் உருவாக்கியிருக்க முடியாது. எனவே, எப்படியும் பெரிய அளவாக இருக்கப்போகிறது, அவருக்குப் பிடித்தமாக எண்ணாக செய்துவிடுவோம் என்று நினைத்தேன். அதனால்தான் 112 அடி!
ஆசிரியர் குறிப்பு: சர்ச்சைக்குரிய சிந்தனையா, பேசினால் பிறர் தூற்றக்கூடிய விஷயம் பற்றி குழப்பமா, எவரும் பதில் சொல்ல விரும்பாததால் உங்களைத் துளைக்கும் கேள்வியா, கேட்பதற்கு இதுதான் நேரம்! சத்குருவிடம் நீங்கள் கேட்க விரும்புவதை UnplugWithSadhguru.org வலைதளத்தில் பதிந்திடுங்கள்!
![YAT18_Newsletter-650x120](https://static.sadhguru.org/d/46272/1633206216-1633206211377.jpg)